Thursday, October 24, 2013

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய திருக்கண்டியூர் வடுக பைரவர்!!!




பல யுகங்களுக்கு முன்பு ஆதி சிவனுக்கு இருந்தது போல,பிரம்மனுக்கும் ஐந்து முகம் இருந்தது;அதனால் கர்வம் கொண்ட பிரம்மனது ஐந்தாவது தலையைக் கொய்யும் படி ஆதி சிவன் தனது அவதாரமான காலபைரவப் பெருமானுக்கு ஆணையிட்டார்.பைரவப் பெருமானும்,கர்வத்துடன் பேசிய பிரம்மனின் ஐந்தாவது தலையைக் கிள்ளி எறிந்தார்;அடுத்த தலை உடனே தோன்றியது;இப்படி தொடர்ந்து கிள்ளி கிள்ளி எறிய மொத்தம் 999 தலைகள் தோன்றிக்கொண்டே இருந்தன;1000 வது தலையானது காலபைரவரின் கையில் ஒட்டிக்கொண்டது;அந்தக் கையுடன் தேசாந்திரம் செய்தார்;காசிக்குச் சென்றபோது அன்னபூரணி ஸ்ரீகாலபைரவப் பெருமானுக்கு அன்னம் அளித்தாள்;அப்போது அன்னபூரணி(மஹாலட்சுமி அல்ல) ஒரு தந்திரம் செய்தாள்;உலகில் இருக்கும் அத்தனை தானியங்களையும் சேர்த்து உணவாக்கி வீசி எறிய,ஸ்ரீகால பைரவப் பெருமானின் கையில் ஒட்டிக்கொண்டிருந்த பிரம்மனின் தலை விலகியது.
பிரம்மனின் தலையைக் கொய்த இடமே இந்த திருக்கண்டியூர் ஆகும்.திருக்கண்டியூர் அட்டவீரட்டானங்களில் முதல் வீரட்டனாமாகத் திகழுகிறது.

மேலும்,பொய் சொன்னதால் பூமியில் பிரம்மனை வழிபட மக்கள் மறந்துபோயினர்;கோவில்களில் பிரம்மனது சிலைகள் நிறுவப்படவில்லை;அடுத்தடுத்து பிரம்மபதவிக்கு வந்த பிரம்மன்களில் ஒருவர்,தொடர்ந்து சிவவழிபாடு செய்து இந்த சாபத்தை நிவர்த்தி செய்திருக்கிறார்.பிரம்மா தனது வாழ்க்கைத் துணை கலைவாணியோடு மகிழ்ச்சியோடு இருக்கும் ஸ்தலம் இதுவே.

அகங்காரத்தை அழித்து ஆன்மா உய்வு பெற விரும்புவோர் திருக்கண்டியூர் மூலவரை வழிபட வேண்டும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தமது ஜன்ம நட்சத்திரம் வரும் நாளில் இங்கே வந்து மூலவருக்கும்,அம்பிகைக்கும் அபிஷேகம் செய்துவிட்டு முடிவாக அந்த நாளின் இராகு காலத்தில் இங்கே வீற்றிருக்கும் ஸ்ரீகாலபைரவப் பெருமானுக்கு அத்தர்,புனுகு,ஜவ்வாது,சந்தனாதித்தைலம்,செவ்வரளி மாலை,பால்,மரிக்கொழுந்து,அரகஜா போன்றவைகளைக் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.முடிவில் நம் பெயருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்;அபிஷேகம் செய்யும் சிவாச்சாரியருக்கு மனப்பூர்வமான தட்சிணை தர வேண்டும்.

ஒன்றுக்கும் மேற்பட்ட ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கூட்டாகவும் இங்கே இந்த வழிபாடு செய்யலாம்;இதன் மூலம் அவர்களின் கர்மவினைகள் கரைந்து வளமான வாழ்வு கிட்டும்.

தஞ்சாவூரில் இருந்து திருவையாறு செல்லும் சாலையில் அமைந்திருக்கும் காவிரிக்கரையோர கிராமமே திருக்கண்டியூர்.

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

No comments:

Post a Comment