Thursday, October 24, 2013

மிருகசீரிடம் நட்சத்திரத்துக்குரிய க்ஷேத்திரபால பைரவப் பெருமான்!!!




பூலோகத்திற்கு வந்திருந்த பிரம்மா விஷ்ணுவிடம் தானே வல்லவன்;தனது ஆணையால் தான் விஷ்ணு பூவுலைக் காக்கிறார்;குரூர கர்மத்தினால் அழிக்கும் செயலில் ஈடுபட்டிருப்பதால் அவர் மேலானவர் அல்ல; என்று வாதிட்டார்.

அப்போது சிம்பு(சிவனின் இன்னொரு பெயர் இது) பார்வதி மற்றும் தனது பாதுகாவலர் காலபைரவப் பெருமானுடன் அவ்விடம் வந்தார்;பிரம்மனின் இந்த திமிரான பேச்சைக் கேட்டு,அவரது ஐந்தாவது தலையைக் கொய்யும்படி காலபைரவப் பெருமானுக்கு ஆணையிட்டார்.அதன்படி,ஸ்ரீகாலபைரவப் பெருமான்,பிரம்மனின் ஐந்தாவது தலையைக் கொய்தார்;அவ்வாறு கொய்தப் பின்னரும்,பிரம்மா உயிரோடு இருந்தார்.தனது அகங்காரம் நீங்கியதால் அவர் பைரவப் பெருமானைத் துதிக்கத் துவங்கினார்.

பிரம்மாவின் தலையைக் கொய்ததால் ஸ்ரீகால பைரவப் பெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.அது நீங்குவதற்காக,சிம்புவின்(சதாசிவனின்) உத்தரவுப்படி 12 ஆண்டுகள் வரை(ஜோதிடப்படி குரு ஒரு ராசிக்கு மீண்டும் வர ஆகும் காலம்) பல இடங்களில் திரிந்து கபாலத்தில் ரத்தபிட்சை எடுத்துவந்தார்.

ஒரு சமயம்,விஷ்ணுவின் இருப்பிடமான வைகுண்டத்திற்குச் சென்று பிச்சை கேட்டார்.விஷ்ணு இயன்ற அளவு ரத்த பிட்சை அளித்தும் கபாலம் நிறையவில்லை;எனவே,விஷ்ணு கூறினார்:- நான் பத்து அவதாரங்கள் எடுத்து,ஒவ்வொரு அவதாரத்திலும் எதிரிகளைக் கொன்று அதன் மூலம் போதுமான ரத்தப் பிட்சை அளிப்பேன்
அவ்வாறு ரத்தப் பிட்சை எடுத்து வந்தபோது காவேரி தீர்த்தம் அருகே வந்ததும் ஸ்ரீகாலபைரவப் பெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது.ஸ்ரீகாலபைரவ பெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் நீங்கிய இடமே க்ஷேத்திரபாலபுரம் ஆகும்.

ஸ்ரீகாலபைரவப்பெருமானுக்கு தோஷம் நீங்கும் இடத்தில் சூலம் கிடைக்கும்;என்று சிம்பு(சதாசிவன்) கூறியிருந்தார்.அதன்படி இங்கே கிடைத்த சூலத்தை எடுத்துக் கொண்டார்.பின்னர் ஸ்வேதவிநாயகரை வணங்கினார்.

இந்த ஊரில் பிறக்கும் மனிதர்களுக்கு ஸ்ரீகாலபைரவப் பெருமானின் அருள் கிட்டும்;இந்த ஊரில் இறப்பவர்களுக்கு வலது காதில் தாரக மந்திரம் உபதேசித்து யமவாதனை இல்லாமல் செய்யக் கடவாய் என்று அருளினார்.

காசித்தீர்த்தத்தில் மூன்று நாள் நீராடிய பலன் காவேரி சங்குமுக தீர்த்தத்தில் ஒரு நாள் நீராடினாலே கிடைக்கும்;க்ஷேத்திரபாலபுரத்தில் ஸ்ரீகால பைரவரை பிரம்மா,இந்திரன்,சக்திகள்,நவக்கிரகங்கள் பூஜித்து பலன் பெற்றனர்.மஹாபாரதத்தில் அர்ஜீனனுக்கு பாசுபத அஸ்திரம் கிடைக்க,அர்ஜீனன் வெகுகாலமாக பைரவ உபாசனை செய்திருக்கிறார்.அதனால்,ஸ்ரீகாலபைரவப்பெருமான் நேரடியாக வந்து பாசுபத அஸ்திரம் பெறும் வழிமுறையை உபதேசித்தார்.

காலை 8 மணிக்குள் காவிரியில் இருக்கும் சங்குமுக தீர்த்தத்தில் நீராட வேண்டும்;பிறகு அதே நாளில் காலை 10.30க்குள் சூலதீர்த்தத்தில் நீராடிவிட்டு,11 மணியில் இருந்து 12 மணிக்குள் ஸ்ரீகாலபைரவரை வழிபட வேண்டும்.இவ்வாறு 16 ஞாயிற்றுக்கிழமைகள் வழிபட்டால் தீராத கர்மவினைகளும் தீரும்.பில்லி,ஏவல் முழுமையாக விலகும்.

க்ஷேத்திரபால புரம் கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை(மாயவரம்) செல்லும் வழியில் அமைந்திருக்கிறது.

மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்த பைரவப் பெருமானை வழிபட பைரவப் பெருமானின் தரிசனமும்,அருளும் கிட்டும்.

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

No comments:

Post a Comment