Monday, October 7, 2013

ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாட்டு அனுபவங்கள்


சிவனை வழிபட்டால் பாவங்கள் விலகும்;பெருமாள் எனப்படும் ஹரியை வழிபட்டால் செல்வம் சேரும்;     நமக்கு உடனே பணம் கிடைக்கவேண்டும் என்று விரும்புகிறோம்;அதுவும் நிறைய்ய பணம் கிடைத்தால் கடன்,நோய்,பிரச்னைகள் தீர்த்துவிடலாம் என்று துடிக்கிறோம்;இந்தத் துடிப்பில்தான் மனிதர்களாகிய நாம் நமது திறமைகளை வெளிப்படுத்துகிறோம்;ஒருங்கிணைப்புப் பணி மூலமாக நிறைய்ய சம்பாதிக்கிறோம்;ஆனாலும்,நமது வருமானத்துக்கும் நமது தேவைக்கும் இடையே இருக்கும் இடைவெளி பெரிதாகிக் கொண்டே போகிறது.
இந்த பற்றாக்குறையை திறமையாகச் சமாளிக்கும் நமது வீட்டுப்பெண்களை நாம் பாராட்டியே ஆக வேண்டும்;அவர்களுக்குத் தான் எத்தனை பிரச்னைகள்?அத்தனையையும் பொறுத்துக்கொண்டு,கிடைக்கும் பணத்தில் சாமர்த்தியமாக குடும்பம் என்ற பேருந்தை/கப்பலை ஓட்டிச் செல்வதை ஆண்கள் புரிந்துகொண்டால்,கணவன் மனைவி பிரச்னை வரவே வராது.

இதே போல மன்மோகன்,சோனியா,கபில்சிபில்,மண்டேக்சிங் அலுவாலியா,ப.சிதம்பரம்,ராகுல் போன்றவர்களையும் ஒரு  மாதத்துக்கும் நடுத்தர மக்களாக மாற்றி நாம் படும் பணச் சிக்கல்களை உணர வைக்க வேண்டும்;அப்படிச் செய்தால்தான் இவர்கள் இந்தியாவின் நலனுக்கு ஏற்றவிதத்தில் ஆட்சி புரிவார்கள்;யார் இதைச்  செய்வது? சரி,எதுக்கு கற்பனை?!!?? விஷயத்துக்கு வருவோம்:-
எனக்குத் தெரிந்து தினமும் பெருமாள் கோவிலுக்குச் சென்று பெருமாளே எனது கஷ்டத்தைத் தீர்க்க மாட்டாயா? என்று புலம்புபவர்களை பார்த்திருக்கிறேன்;அவர்களில் பெரும்பாலானவர்கள் ஒரு சில மாதங்கள் அல்லது வருடங்களில் பெருமாளை நம்பி பிரயோஜனமில்லை;என்று விரக்தியில் வேறு தெய்வத்தை வழிபடச் சென்றுவிடுகிறார்கள்.(சும்மா உடான்ஸ் அடிக்கிறேன் என்று நீங்கள் நினைத்தால்,பெருமாள் கோவில் பூசாரியிடம் விளக்கம் கேட்டுக்கொள்ளவும்)
ஒரு சில பக்தர்கள் விடாமல் 10 வருடமாக அல்லது 12 வருடமாக ஏன் 20 வருடமாக ஒரு நாள் கூட விடாமல் பெருமாளை வழிபட்டு பெரும்  செல்வச் செழிப்பை அடைந்திருக்கிறார்கள்.இதற்கான உதாரணங்களை பல பெருமாள் பக்தர்களை நேரடியாகவே காட்ட முடியும்.
இதேபோல 10 அல்லது 12 அல்லது 15 அல்லது 20 வருடங்களாக சிவனை வழிபட்டு நிம்மதியான வாழ்க்கையை அடைந்தவர்களும் தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான பேர்கள் இருக்கிறார்கள்.உலகமயமாக்கல் வந்தபிறகு,நம் ஒவ்வொருவருமே பணத்தின் பின்னாடி பின்னங்கால் பிடறி தெரிக்க ஓடியே ஆக வேண்டிய நிர்பந்தத்துக்கு வந்துவிட்டோம்;அதுவும் உடனே பணம் கிடைக்க வேண்டும்;நிறைய்ய பணம் வேண்டும் என்று ஏங்குகிறோம்;நியாயமான வழியில் நிறைய பணம் கிடைக்காது என்று நம்புபவர்கள் தடம் மாறிச் சென்றுவிடுகிறார்கள்.இருந்தும் கூட பெரும்பாலான தமிழர்கள் நியாயமான வழியிலேயே பெரும் பணம் சம்பாதிக்க ஆன்மீக வழிமுறைகளைப்பின்பற்றிக் கொண்டே முயற்சி செய்கின்றனர்.அவர்களுக்கு மட்டுமே இந்தப் பதிவு:
ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிகள் இருக்கும் கோவில்கள் தமிழ்நாட்டில் இதுவரை 19 கண்டறியப்பட்டுள்ளன;இவைகளில் பழமையானவை சுமார் 5 தான் இருக்கும்;இந்த ஐந்து சன்னதிகளில் திண்டுக்கல் தாடிக்கொம்பு கிராமத்தில் இருக்கும் ஸ்ரீசவுந்தரராஜப்பெருமாள் கோவிலும் ஒன்று ஆகும்.
தொடர்ந்து எட்டு தேய்பிறை அஷ்டமிகளுக்கு ஸ்ரீசொர்ண பைரவர் வழிபாடு செய்தால்,நமது பணம் சார்ந்த பிரச்னைகள் தீரும் என்பது குரு உபதேசம் ஆகும்.ஒரு தேய்பிறை அஷ்டமிக்கு எங்களுக்கு அருகில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் சன்னதிக்குச் சென்று வந்தோம்;வந்த ஒரு மாதத்தில் ஒவ்வொருக்கும் ஒவ்வொருவிதமான பணப்பிரச்னைகள் தீர்ந்தன.எம்மோடு வந்த ஒருவர் நூற்பு ஆலை தொடர்பான சிறிய ஆலை ஒன்று நடத்தி வருகிறார்;அடிக்கடி எம்மிடம் ஜோதிடம் பார்ப்பவர் என்பதால்,அவரை அழைத்துக்கொண்டு முதல் மாதம் தாடிக்கொம்பு அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் கோவிலினுள் அமைந்திருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் சன்னதிக்கு பயணித்தோம்;பயணிக்கத் துவங்கிய ஒரு மணி நேரத்தில் அவருக்கு ஜாப் ஆர்டர்(ஒப்பந்தப் பணி) கிடைத்தது;கடவுளையே நம்பாத அவரே இதை ஆச்சரியமாகச் சொன்னார்;
இன்னொருவருக்கு நீண்டகாலமாக வராமல் இருந்த ஒரு தொழில் கடன் ஒரே தவணையில் வசூலானது;இத்தனைக்கும் அந்த தொழில் கடன் சில லட்ச ரூபாய்களைத்தொடும்;அது வட்டியோடு ஒரே தவணையில் கிடைத்ததால்,அவர் தனது தொழிலை ஒரே மாதத்தில் விரிவு படுத்திவிட்டார்.இவருக்கோ தாடிக்கொம்பில்  இருக்கும்       ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் சன்னதிக்கு தேய்பிறை அஷ்டமிக்குச் சென்று வந்த மூன்றாவது நாள் இரவு கிடைத்தது;
ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் சிலர் எம்மோடு தொடர்ந்து இரண்டு தேய்பிறை அஷ்டமிகளுக்கு தமது குடும்பத்தோடு வந்திருந்தனர்;வந்த மறுநாளிலிருந்தே அவர்களுடைய முதுமைக்கால நோய்களின் தாக்கமும்,வேதனைகளும் பெருமளவு குறைந்து போயிருந்தது;


இதேபோல பலருக்கு ஏராளமான பணச்சிக்கல்கள்,தொழில் முடக்கங்கள்,குடும்பக் குளறுபடிகள் தீர்ந்துபோயிருக்கின்றன;அவைகளை விரிவாக எழுத உரியவர்கள் சம்மதிக்கவில்லை;


முதல் தேய்பிறை அஷ்டமிக்கு நாங்கள் ஆறு பேர்களாக ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவரை வழிபடச் சென்றோம்;மூன்றாவது தேய்பிறை அஷ்டமிக்கு இந்த எண்ணிக்கை தானாகவே 20 ஆக அதிகரித்தது;10 வது மாதத்தில் இந்த எண்ணிக்கை 45 ஆக எகிற,எங்கள் ஊரில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவரின் அருளாசியால் நானும் பிரபலமாகத் துவங்கினேன்.
நாம் செய்ய வேண்டியது என்ன தெரியுமா? தேய்பிறை அஷ்டமியன்று வரும் ராகு காலத்தில் உங்களது ஊருக்கு அருகில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் சன்னதியின் முன்பாக அமர்ந்திருக்க வேண்டும்.அமர்ந்து நமது நியாயமான கோரிக்கைகளை மனப்பூர்வமாக வேண்ட வேண்டும்;முடிந்தால் ஓம் ஸ்ரீசொர்ண பைரவரே போற்றி என்று அந்த ராகு காலம்முழுவதும் ஜபித்து வரலாம்;கொஞ்சம் சமஸ்க்ருதம் தெரிந்தால் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவரின் மூலமந்திரத்தை 330 தடவை(எண்ண வேண்டாம்) விடாமல் மனதுக்குள் ஜபிக்க வேண்டும்;

தேய்பிறை அஷ்டமியன்று வரும் ராகு காலத்தில் ஸ்ரீசொர்ண பைரவரின் சன்னதிக்கு சூட்சுமமாக அஷ்ட லட்சுமிகளும் வருகை தருகிறார்கள்;அவர்கள் சொர்ண பைரவரை வழிபடுகிறார்கள்;அப்படிப்பட்ட நேரத்தில் நாமும் போய் வழிபாடு செய்தால்,கோரிக்கை வைத்தால் அடுத்த தேய்பிறை அஷ்டமிக்குள் நமக்கு திடீரென ஒரு பணப்பிரச்னை/கடன் தீர்ந்துவிடுகிறது;அல்லது பண வரவு நியாயமான வழியில் அதிகரித்துவிடுகிறது.இந்த தெய்வீக ரகசியத்தை நமக்கு போதித்த மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களுக்கு நாம் எவ்வ்வளவு கடமைப்பட்டிருக்கிறோம்?
ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவரை தேய்பிறை அஷ்டமியில் வரும் ராகு காலத்தில் வழிபாடு செய்தால்,நமது கடுமையான கர்மவினைகள் தீரத் துவங்கும்;எவ்வளவு தீர்ந்திருக்கிறதோ அதே அளவுக்கு செல்வச் செழிப்பு உடனே நம்மைத் தேடி வரும்;அதாவது ஒரே வழிபாட்டின் மூலமாக சிவனது அருளையும்,பெருமாளின் அருளையும் நாம் பெறலாம்.சிவனையோ அல்லது பெருமாளையோ 10 அல்லது 12 அல்லது 20 ஆண்டுகள் வழிபட்டப்பின்னர்,நாம் பெரும் செல்வச் செழிப்பை அடைய வேண்டியதில்லை;வெறும் எட்டே எட்டு தேய்பிறை அஷ்டமிகளுக்கு ஸ்ரீசொர்ண பைரவர் வழிபாடு செய்தாலே போதுமானது;அனுபவப்படி பார்க்கும்போது 12 தேய்பிறை அஷ்டமிகளுக்கு வழிபாடு செய்வதன் மூலமாக செல்வச் செழிப்பு கிடைக்கிறது!!!



தாடிக்கொம்பு அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் கோவிலைப் பொறுத்தவரையிலும்,தேய்பிறை அஷ்டமியன்று சுமார் 5 முறை ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவருக்கு அபிஷேகங்கள் செய்துவருகின்றனர்;இதில் எந்த அபிஷேகம் ராகு காலத்தில் வருகிறதோ அந்த நேரத்தில் எமது குழுவினர் வந்து வழிபாடு செய்து முடித்துவிட்டோம்;இதன் மூலமாக எமது குழுவினர் அனைவருமே பொருளாதாரச் சுயச்சார்பு(Economical Self Reliance) அடைந்துவிட்டனர்;
நீங்களும் முயன்று பாருங்கள்:
அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு உங்கள் முயற்சியை துவக்குங்கள்;ஆமாம்! நிரந்தரமாக அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிடுங்கள்.
தேய்பிறை அஷ்டமி வரும் நாளில் ராகு காலத்தில் தாடிக்கொம்பு ஸ்ரீசொர்ண பைரவரை வழிபட்டுவிட்டு,நேராக உங்கள் வீடு/அலுவலகத்துக்குச் செல்வதை வழக்கமாக்கி வைத்துக்கொள்ளுங்கள்;
தேய்பிறை அஷ்டமியன்று கூட்டம் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்துக்கும் ஒருமுறை சுமார் 2000 பக்தர்கள் திண்டுக்கல் தாடிக்கொம்பு அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் கோவிலுக்கு வருகிறார்கள்;எனவே,தேய்பிறை அஷ்டமி தினத்தில் மூலவரை தரிசிப்பது சிரமம்;எனவே,நீங்கள் வரத்துவங்கும் முதல் தேய்பிறை அஷ்டமியன்று காலை எட்டு மணிக்குள்ளாகவே வந்துவிடவும்.வந்து மூலவரை தரிசித்து ஆசி வாங்கிக்கொள்ளவும்.
மிகவும் சக்தி வாய்ந்தவராக அருள் மிகு சவுந்தரராஜப்பெருமாள் இருப்பதால் மாதத்தில் சுமார் 7 நாட்கள் கூட்டம் குவிந்த வண்ணம் இருக்கின்றன;
மிகவும் சக்தி வாய்ந்தவராக இருப்பதால் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவரைத் தேடி வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.இன்று வரையிலும்(அக்டோபர்,2013) தமிழ்நாட்டின் தெற்குப் பகுதியில் இருக்கும் ஒரே  ஸ்ரீசொர்ண பைரவர் இவர் மட்டுமே!!
                  
ஓம்ஹ்ரீம் மஹாபைரவாயநமஹ

No comments:

Post a Comment