Sunday, January 12, 2014

கார்த்திகை நட்சத்திரத்தினர் வழிபடவேண்டிய அண்ணாமலை ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர்!!!




நவக்கிரகங்களில் முதல்வராக இருப்பவர் சூரியன்;அந்த சூரியன் என்ற ரவி ஜாதகப்படி உச்சமடைவது கார்த்திகை நட்சத்திரத்தில்!!! கார்த்திகை நட்சத்திரத்தின் முதல் பாதம் மேஷ ராசியிலும்;இரண்டு,மூன்று,நான்காம் பாதங்கள் ரிஷபராசியிலும் அமைந்திருக்கிறது.இதனால்,ஜோதிடக் கலையானது கார்த்திகை நட்சத்திரத்தை தலையற்ற நட்சத்திரம் என்று வகுத்திருக்கிறது.

முதல் ராசியான மேஷராசியில் கார்த்திகை முதல்பாதமும்,ரிஷபராசியில் கார்த்திகை 2,3,4 ஆம் பாதங்களும் அமைந்திருப்பதில் ஒரு மானுட சூட்சுமம் ஒளிந்திருக்கிறது; ரத்தகாரகனாகிய செவ்வாயின் முதல் ராசி மேஷம்;சுக்கிலக்காரகனாகிய சுக்கிரனின் முதல் ராசி ரிஷபம்;இரண்டு ராசிகளையும் இணைப்பதோ கார்த்திகை நட்சத்திரம்!

மனிதனாகப் பிறந்தவர்களுக்கு ரத்தமும்,சுக்கிலமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்;அப்படி இருந்தால் தான் முதுமைக் காலத்திலும் ஆரோக்கியமாக வாழ முடியும்;இந்த தெய்வீக ஜோதிட ரகசியத்தை அறிந்த நமது முன்னோர்கள் கார்த்திகை வழிபாட்டைத் துவக்கினர்;
அதனால் தான் பல கோடி வருடங்களாக தமிழ் மக்கள் கார்த்திகை அன்று செவ்வாயின் அதிதேவதையான முருகக் கடவுளை வழிபட்டு வருகின்றனர்;நட்சத்திர பைரவர்கள் வரிசையில் கார்த்திகை நட்சத்திரத்திற்கும்,அனுஷம் நட்சத்திரத்திற்கும் உரிய பைரவப் பெருமான் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவப் பெருமான் அமைந்திருக்கிறார்;
பஞ்சபூதங்களில் அக்னி மலையாக இருப்பது அண்ணாமலை! அண்ணாமலையில் உள்பிரகாரத்தில் பள்ளியறைக்கு அருகில் அமைந்திருப்பவர் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவப் பெருமான்! இவரே கார்த்திகை நட்சத்திரத்துக்குரிய பைரவர் ஆவார்;

கார்த்திகை ஒன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள் அளவற்ற முன்கோபிகளாக இருப்பார்கள்;இதில் விதிவிலக்குகளும் உண்டு;ஏனெனில்,மேஷராசியில் சூரியன் சித்திரை மாதத்தில் சஞ்சாரிப்பார்;சித்திரை மாதத்தில் கடைசிவாரத்தில் சூரியன் கார்த்திகை 1 ஆம் பாதத்தினைக் கடக்கும் போது நாம் அதை அக்னி நட்சத்திரமாகக் கொண்டாடுகிறோம்;

கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்(மேஷராசியினரும்;ரிஷபராசியினரும்) கார்த்திகை நட்சத்திரம் வரும் நாட்களில் அண்ணாமலையில் அமைந்திருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவரை பின்வரும் பொருட்களால் வழிபட்டு வர அனைத்து முற்பிறப்பு கர்மாக்களும் தீர்ந்துவிடும்;கூடவே,கிரிவலமும் செல்வது நன்று.அல்லது கிரிவலம் மட்டுமாவது அடிக்கடிச் செல்வது சிறப்பு;

அத்தர்

புனுகு

ஜவ்வாது

சந்தனாதித்தைலம்

செவ்வரளிமாலை

பால்

அரகஜா

தேன்

செவ்வாழைப்பழங்கள்

மரிக்கொழுந்து

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ